உசிலம்பட்டி அருகே பயங்கரம்.. 12 வயது சிறுவனை சக நண்பர்களே அடித்து கொலை.. 3 பேர் கைது!
சிறுவனை அடித்து கொலை செய்த சக நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: உசிலம்பட்டி அருகே 12 வயது சிறுவனை சக நண்பர்கள் அடித்துக் கொலை செய்த பயங்கரம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சிறுவன் கவின்குமார். 12 வயதான இவன், தனது நண்பர்கள் 3 பேருடன் ஊருக்கு அருகிலுள்ள கண்மாயில் குளிக்க நேற்று சென்றுள்ளான். ஆனால் குளிக்கச் சென்ற கவின்குமார் இரவாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் சிறுவனின் உறவினர்கள் பதட்டடைந்தனர்.
இதனால் பல குளிக்க சென்ற இடத்திற்கு தேடி சென்றனர். அப்போது கண்மாய் நீரில் உடலில் காயங்களுடன் சிறுவன் கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு, இதுகுறித்து உத்தப்பநாயக்கணூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், கவின்குமாருடன் சென்ற சக நண்பர்களே அவனை கண்மாய் நீரில் தள்ளி அடித்துக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மூன்று சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த சிறுவர்கள் அனைவருமே 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.