பொன்னேரியில் பிளஸ் 1 பெயிலானதால் மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
பிளஸ் 1 பெயிலாகி விட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
பொன்னேரி: பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பெரியார் நகரை சேர்ந்தவர் மாரி. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மகள் சுஜிதா என்பவர் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். பிளஸ் 1 ரிசல்ட் வெளியானதில் தன்னுடைய 3 பாடங்களில் பெயிலாகி உள்ளார் சுஜிதா. இதனால் அவர் மன அழுத்தத்திலேயே இருந்திருக்கிறார். போதாக்குறைக்கு 3 பாடங்களில் பெயில் ஆனதை அவரது தாய் சொல்லிக் காட்டியும், கண்டித்தும் வந்துள்ளார்.
கூடவே அந்த வேதனையும் சேர்ந்து கொண்டது. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற சுஜிதா, கடந்த 10-ம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை குடும்பத்தார் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும், பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஜிதா நேற்று இறந்துபோனார்.
முதன்முதலாக கொண்டு பிளஸ் 1 பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு முறை இந்த வருடம் கொண்டு வரப்பட்டு அதற்கான ரிசல்ட்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அத்துடன் இதில் பெயிலானாலும் நேராக பிளஸ் 2 சென்றுவிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தவிர பிளஸ் 1 பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும், இதற்காக வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில், சிறப்புத் துணைத் தேர்விற்கு, தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்றுகூட ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதில் எதைப்பற்றியும் அறிந்து கொள்ளாத, புரிந்துகொள்ளாத மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. படித்த மாணவிக்கு நடைமுறையில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எதுவுமே தெரியாமல் போனது வேதனைதான் அளிக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் நேரத்திலெல்லாம் விட்டுவிட்டு, மன அழுத்தம், சோகத்திலும் இருக்கும்போதுதான் கண்டிக்க வேண்டுமா? ஒரு மாணவனோ, மாணவியோ, குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலானோர் இரண்டாம் கெட்ட மனநிலையில் உள்ளவர்கள். எந்த பிரச்சனையையும் தெளிவில்லாமல், ஆழமாக அணுக தெரியாதவர்கள். எந்த முடிவையும் உறுதிபட எடுக்க தெரியாதவர்கள். அவர்களிடம் பக்குவமும், பொறுமையும், கனிவும், பாசம்கலந்த புத்திமதிகளும்தான் அப்போதைய உடனடி தேவை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இல்லையென்றால் பெத்த பிள்ளைகளை இப்படி இழந்துவிட்டு காலமெல்லாம் தவித்து கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படும்.