நகைக்கடையில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை.. பாலியல் தொல்லை?
நகைக்கடையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பெரம்பூரில் நகைக்கடை ஒன்றில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கமாரியப்பனின் மகள் தனலட்சுமி. 17 வயதான இவர் சில நாட்களாக பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் நகைக்கடையின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அங்கு பணிபுரியும் சூப்பர்வைசர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததினால் தனலட்சுமி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதை காவல் துறைக்கு தெரிவிக்காமலும் அருகில் எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அதன் உரிமையாளரான பாபு ஒப்புக்கொண்டுள்ளார்.
தங்களின் குடும்ப சூழ்நிலைக்களுக்காக பிழைக்க வரும் சிறு பிள்ளைகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வரும் இதுபோன்று பல நிறுவனங்கள் சென்னையில் இருந்துக் கொண்டுதான் உள்ளது. அது மட்டுமல்லாமல் 17 வயதில் வேலைக்கு சேர்த்த முதலாளி பாபு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிலர் பணம் பெற்றுக்கொண்டு இந்த சம்பவத்தை மூடி மறைத்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.