காரில் கடத்தப்பட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. நகைகளையும் திருடிச்சென்ற நபர் கைது
டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு காரில் கடத்தப்பட்டு பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு பார்ட்டி முடிந்து வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணை காரில் கடத்திய நபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் அந்த நபர் திருடிச்சென்றுள்ளார்.
நாகலாந்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் தாம் காரில் அழைத்து சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவரது காரில் ஏறியுள்ளார்.
காரில் கடத்தி பலாத்காரம்
டெல்லி டீர் பார்க் அருகே சென்றபோது காரை நிறுத்திய அந்த நபர் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த கல்லால் அந்தப் பெண் தாக்கியுள்ளார்.
நகைகளும் கொள்ளை
இதையடுத்து அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது
இளைஞர் கைது
ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து ஹுமயான்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
14 நாள் நீதிமன்றக் காவல்
அந்த இளைஞர்தான் பாலியல் பலாத்காரம் செய்தார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சையும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது.