சர்வதேச மூத்தோருக்கான தடகள போட்டியில் சாதிக்க துடிக்கும் கோவை வசந்தி!
பாத்திரம் கழுவி வாழ்க்கை நடத்தும் பெண் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
கோவை: பாத்திரம் கழுவி தனது வாழ்க்கையை கடந்து வந்த கோவையை சேர்ந்த 35 வயது பெண்மணி, தேசிய அளவில் பதக்கங்களை குவித்து , தற்போது சர்வதேச அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டியில் பங்குபெறும் வாய்பை பெற்றும் உதவி கிடைக்கததால் போட்டியில் பங்குபெறுவது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
கோவையை அடுத்த இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவர் கடைகள் மற்றும் வீடுகளில் பாத்திரம் கழுவி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவரது கணவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மற்றும் மகன் தடகளத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போது, அவ்வப்பொழுது வசந்தியும் மைதானத்திற்கு சென்று வருவார்.
பயிற்சியாளரின் ஊக்கம்
அப்போது மூத்தோருக்கான தடகள போட்டியில் பங்கேற்கலாம் என அவரை ஊக்கப்படுத்தி அவரது விளையாட்டு வாழ்க்கையை துவங்கி வந்தவர் அவரது பயிற்சியாளர் தான். இவர் அளித்த ஊக்கத்தால் தான் தானும் ஓட முடியும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன், ஆரம்பத்தில் கோடை கால பயிற்சி வகுப்புகளுக்கு சென்று அங்கு வீரர் வீராங்கனைகளுக்கு சமையல் செய்து கொடுத்து தானும் பயிற்சி மேற்கொண்டு தான் தனது விளையாட்டு வாழ்க்கையை துவங்கி இருக்கிறார் வசந்தி.
சர்வதேச அளவில் வசந்தி
35 வயதாகவும் வசந்தி, குடும்பத்தின் வறுமை காரணமாக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அதன் மூலம் வரும் பரிசை பெறுவதற்காக விளையாட்டில் ஈடுபட்டு வந்த இவர் , தற்போது இவரின் சாதனை சர்வதேச அளவில் செல்ல உள்ளது. மாவட்ட , மாநில அளவில் சாதித்த வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டியில் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை குவித்து தற்போது ஸ்பெயினில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்று உள்ளது.
நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்
சாதிக்க வேண்டும் என கூறியதால் விளையாட்டிற்கு அனுப்பியதாக கூறி இவருக்கு மிகுந்து ஆதரவாக இருக்கிறார் வசந்தியின் கணவர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் மிகுந்த போட்டியளிக்கும் வசந்தி, மற்ற வீராங்கனைகள் பார்த்து பயப்படும் வகையில் இவரது சாதனைகள் அமைந்து உள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார் இவரது மகள். இவரும் மாநில அளவிலான தடகள போட்டியில் சாதித்து வருகிறார். சாதாரண குடும்பத்தில் இருந்தாலும் சாதித்து காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இந்த அளவிற்கு சாதிக்க வைத்து உள்ளதாகவும், தொடர்ந்து இவரது சாதனைகள் தொடர தற்போது உதவிகள் தேவைப்படுவதாகவும், அதன் மூலம் இவரது சாதனைகள் இன்னும் தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் எனவும் கூறுகிறார் இவரது பயிற்சியாளர்.
ஸ்பெயின் செல்வாரா சாந்தி?
பல தடைகளை கடந்து சாதித்து வரும் வசந்தி, தற்போது சர்வதேச போட்டியில் பங்குபெற வேண்டும் என்பதன் காரணமாக தற்போது எந்த வேலைக்கும் செல்லாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் பண உதவி கிடைக்காததால் இவர் ஸ்பெயின் சென்று விளையாட முடியுமா என தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு மற்றும் பலரும் உதவினால் தொடர்ந்து சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என வேண்டுகோள் வைத்து உள்ளார். தற்போது சர்வதேச அளவில் விளையாடுவோம் என்ற நம்பிக்கையுடன் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.