பொன்னேரி அருகே சோகம்.. மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் பலி!
மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.
திருவள்ளூர்: பொன்னேரி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி அருகே வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். கூலி தொழிலாளியான இவர், தனது அண்ணன் மகன் கோகுல் என்ற 4 வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து கொண்டு வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக மணலை கடத்தி கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. மின்னல் வேகத்தில் வந்த வேனானது, இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுவன் கோகுல் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், கோகுலின் சடலத்தை மீட்க வந்தனர். ஆனால், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி கோகுலின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்த பின்னர், போலீசார் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டதுடன், சிறுவனையும் வாகனம் ஏற்றி கொன்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.