நாமக்கல் துயரம்: குழந்தையை பாலத்தின் சுவர் மீது உட்கார வைத்து செல்பி எடுத்ததே விபரீதத்துக்கு காரணம்!
நாமக்கல்லில் பாலத்தின் மீது குழந்தையை உட்கார வைத்து செல்பி எடுத்ததே குழந்தை ஆற்றில் விழுந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Recommended Video
நாமக்கல்: பாலத்தின் கைப்பிடி சுவர் மீது குழந்தையை உட்கார வைத்து செல்பி எடுத்ததே குழந்தை ஆற்றில் விழுந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யாமலேயே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பவானி, வைகை, காவிரி என அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் முதல் கடை மடை வரை காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
காவிரியில் செல்பி
பல ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை வியப்புடன் பார்க்கும் மக்கள் ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்து வருகின்றனர். இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்தனர்.
நடுப்பகுதியில் விழுந்த குழந்தை
அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்தது. பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அவர்கள் செல்பி எடுத்ததால் குழந்தை ஆற்றின் நடுப்பதியில் விழுந்து அடித்து செல்லப்பட்டது.
இன்று பிறந்தநாள்
கரூர் அருகே எல்ஜிபி நகரை சேர்ந்தவர் பாபு. இவரது நான்கு வயது மகன் தன்வந்த். இன்று தன்வந்துக்கு பிறந்தநாள் என தெரிகிறது. தன்வந்த் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்.
சுவர் மீது அமர வைத்து போட்டோ
இன்று அவனது பெற்றோருடன் வாங்கல் காவிரியாற்று பாலத்திற்கு சென்று உள்ளார். காவிரி ஆற்று பாலம் கைப்பிடி சுவர் மீது அமர வைத்து போட்டோ எடுக்க முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது தவறுதலாக தன்வந்த் காவிரியாற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
24 வது தூண் பகுதியில்
காவிரி ஆற்றுப் பாலம் 56 தூண்களை கொண்டது இதில் மோகனூர் பகுதியில் இருந்து இருபத்தி நான்காவது பாலக்கட்டை அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
மீட்பதில் சிரமம்
ஆற்றின் நடுப்பகுதி என்பதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாலும் குழந்தையை மீட்பது சிரமம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.