காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவி... பிளேடால் கழுத்தை அறுத்த இளைஞர்... கன்னியாகுமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி அருகே காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவி பிளேடால் கழுத்து அறுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்டட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலிக்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாழக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அப்பகுதியில் கட்டட வேலை செய்து வரும் மகேஷ் என்ற இளைஞர் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் மகேஷை காதலிக்க மாணவி மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
அப்போது அவரை மகேஷ் தனது நண்பர்களுடன் வந்து வழி மறித்துள்ளார். பின்னர் மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த மாணவி மீண்டும் மறுக்கவே ஆத்திரமடைந்த மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் கைகள் மற்றும் கழுத்தில் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதையடுத்து மகேஷ் தனது நண்பர்களுடன் தலைமறைவானார். இதையடுத்து மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.