மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை... ஒரே கயிறில் தூக்கில் தொங்கிய வயதான தம்பதி!
சென்னையில் மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனக்கூறி வயதான தம்பதி ஒரே கயிறில் தூக்கில் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிழக்கு முகப்பேரை அடுத்த பாடிபுதுநகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. 67 வயதான இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவியின் பெயர் கோதை. இந்த வயதான தம்பதி மகன்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற எண்ணத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்புசாமியின் மனைவி கோதைக்கு காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். குப்புசாமிக்கும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.
ஒரே கயிறில் தூக்கு
இருவரும் உடல் நிலை மோசமடைந்ததால் வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகன்களுக்கு தொல்லை தரக்கூடாது என எண்ணிய அவர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரே கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
கல்விச் செலவுக்கே போதாத நிலை
அதில் தங்களின் மகன்கள் ஈட்டும் வருமானம் அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவுக்கே போதாத நிலையில் அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என தனியாக வசித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தாங்கள் இருவருக்கும் உடல்நிலை மோசமாகிவிட்டதால் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உருக்கமான கடிதம்
தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ள குப்புசாமி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு கொடுத்துள்ள அட்வான்ஸ் தொகையையும், தான் செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் தர வேண்டிய சம்பளத்தையும் தங்களது மகன்களிடம் வழங்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.