இறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி.. திருச்சியில் பரபரப்பு!!
திருச்சி அருகே மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி: திருவெறும்பூர் அருகே மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி ஒருவர் நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீண்ட தலைமுடி, உடல் முழுவதும் திருநீர், தியான நிலை என்று வாழும் அகோரிகள் பெரும்பாலும் இமாலய மலை பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
காசியிலும் எண்ணிலடங்கா அகோரிகளை காணமுடியும். இவர்கள் ஆண்டுதோறும் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவில் திரளாக கலந்துகொள்வார்கள். பெரும்பாலும் மயான பகுதிகளில் வாழ்கின்றனர்.
ஜெய் அகோர காளி
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகோரிகள் பூஜை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
நவராத்திரி விழா
இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அகோரியின் தாய் மரணம்
இந்தநிலையில் கோவில் நிர்வாகியான அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து மேரியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
உடல் மீது அமர்ந்து பூஜை
இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார்.
அகோரி பூஜை
அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர். இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது.
விசித்திர பூஜையால்
இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.