கடையநல்லூரில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலி
நெல்லை அருகே கடையநல்லூரில் பன்றி காய்ச்சலால் குழந்தை இறந்ததால் அங்கு பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்ததால் அப்பகுதி முழுவதும் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் காய்ச்சல், டெங்கு காரணமாக உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி கடையநல்லூர் அப்துல் காதர் மகன் ஹபீஸ் என்ற சிறுவன் இறந்தார். அவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்ற நிலையில் மீண்டும் ஒரு சிறுமி பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் ரகுமானியாபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோத்திபாபா. இவரது மகள் நசீரா. 16 மாத குழந்தை. குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் கடையநல்லூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை மாலை இறந்தது.
கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்கும் விதமாக நகராட்சி நிர்வாக துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.