சென்னை அண்ணா சாலையை போல் கீழ்ப்பாக்கத்தில் 6 அடியில் திடீர் பள்ளம்
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் போது சாலையில் திடீரென 6 அடியில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு கிளம்பியது.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் போது சாலையில் 6 அடியில் பள்ளம் ஏற்பட்டது.
சென்னையில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டபோது எல்ஐசி, பாண்டி பஜார், சர்ச் பார்க் கான்வென்ட் உள்ளிட்ட இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இதை மெட்ரோ ரயில் சுரங்க அதிகாரிகள் சரி செய்தனர். எனினும் சர்ச் பார்க் கான்வென்ட் அருகே பஸ் நிறுத்தம் அருகே 10 அடியில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தும், காரும் சிக்கி கவிழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை அருகே சுரங்க பணிகள் நடைபெற்ற போது முகமது யூசுப் என்பவரது வீட்டில் இருந்து குபு குபுவென சிமென்ட் கலவை கொட்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவரது வீடு சேதமடைந்தது.
தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அருகே டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தை சரி செய்யும் பணியில் மெட்ரோ மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.