தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் மிகப்பெரிய நெட்வொர்க்.. சூரப்பா பரபரப்பு தகவல்
Recommended Video
சென்னை: தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் நிருபர்களை இன்று சந்தித்தார் சூரப்பா. அவர் கூறியதாவது: தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக சந்தேகிக்கிறேன். இவர்கள் பல காலமாக இதை செய்து வந்துள்ளனர். இதுபற்றி விரிவான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் முறைகேடு நடக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் தொடர்புள்ள, கல்லூரிகளில் நடந்துள்ளன. அண்ணா பல்கலை. ஊழியர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை. இதில் எத்தனை பேராசிரியர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.
இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஊழல்கள் நடந்து வருகிறது. ஊழலுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்வது இந்திய மனங்களில் ஊறிவிட்டது. எனவேதான், நான் தொடர்ச்சியாக, ஊழலற்ற கடமையை செய்யுமாறு ஆலோசனை கூட்டங்களில் அறிவுறுத்தி வருகிறேன். நான் எப்படி தடுக்க முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மதிப்பெண் மறுமதிப்பீடு விவகாரத்தில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக கூற முடியும். எனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வெளிப்படுத்த முடியாது. சேதம் ஆகிவிட்டது. சேதத்தின் மதிப்பைத்தான் இப்போது ஆய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.