ஆரல்வாய்மொழியில் சோகம்.. பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கார் மோதி பரிதாப பலி
பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மீது கார் ஒன்று எதிர்பாராமல் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு. 27 வயதான ராஜகுருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்புதான் மெர்லின்ஷீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 நாட்களுக்கு முன்பு மனைவி தனது பெற்றோரை பார்க்க பூலாங்குழி சென்றிருந்தார். இதனால் மனைவியை பார்க்க புதுமாப்பிள்ளை ராஜகுரு நேற்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
தாழக்குடி அவ்வையார் அம்மன் கோயிலின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ராஜகுரு மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜகுரு உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்து 18 நாட்களே ஆன ராஜகுருவின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்நிலையில், ராஜகுருவின் மீது காரில் மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி காவல்நிலையம் முன்பு அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, போலீசார் விபத்து ஏற்படுத்தியவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.