இவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானுங்க.. நடத்துனர் முதல் அரசியல்வாதிவரை.. ரஜினி தி மாஸ்!
ரஜினி எப்போது பிறந்தார் அவரது நடத்துநர் பணியின் போது நடந்தது என்ன என்பது பற்றிய சுவாரஸ்மான தொகுப்புகளை இங்கு காண்போம்.
Recommended Video
சென்னை : ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில் அவர் பிறப்பு முதல் நடத்துவர் பணி வரை கடந்து வந்த பாதை குறித்த பயணத்தை பார்ப்போம்.
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக தனிக்கட்சி துவங்க உள்ளதாக அவர் நாளையே அறிவிக்கவுள்ளாராம்.
இந்நிலையில் அவரது பிறப்பு, கல்வி, நடத்துநர் பணி ஆகியவை குறித்து பார்ப்போம்.
ரஜினி எங்கு பிறந்தார்
ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தாய் ஜிஜாபாய்க்கும், தந்தை ராமோஜி ராவ் கெய்க்வாட்டுக்கும் நான்காவதாக பிறந்தவர்தான் ரஜினி.இவர் டிசம்பர் 12, 1950ல் பெங்களூரில் மராட்டிய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்கள். ரஜினியின் அண்ணன் பெயர் சத்தியநாராயண ராவ்.
ஆரம்ப கல்வி
தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினி, பெங்களூரில் உள்ள ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே துணிச்சல் மிக்கவராக இருந்தார்.
கண்டக்டர் பணி
1966 மற்றும் 1973 இடையே அவர் பல இடங்களில் சிறு சிறு வேலைகளில் பணிபுரிந்தார். பின்னர் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக சேர்ந்தார்.அப்போதே அவர் மாஸ்தான். விசில் அடிப்பதிலும், டிக்கெட் கிழித்து கொடுப்பதிலும் கூட அவருக்கென்று தனி ஸ்டைல் இருந்ததாம்.அப்போது அவரது நண்பரும் சக தொழிலாளியுமான ராஜ்பகதூர், ரஜினியின் நடிப்பு திறமையை அறிந்தார். பின்னர் சென்னை நடிப்பு கல்லூரியில் சேர பணம் கொடுத்து ரஜினியை அனுப்பினார்.
பாலசந்தர் இயக்கத்தில்...
1975- ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அபூர்வ ராகங்கள்" என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1976-இல் "கதா சங்கமா" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "மூன்று முடிச்சு" திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அப்போதுதான் சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைலை பார்த்து பாலசந்தரே வியந்தார். இதிலிருந்து ரஜினியும், ஸ்டைலும் பிரிக்க முடியாததாகிவிட்டது. இன்று ரஜினி தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கிறார். "இவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா.." என்ற பாடல் வரிக்கு ஏற்ப தமிழக மக்களை காந்தம் போல இழுக்கும் ரஜினி, என்றுமே பழைய வாழ்க்கையை மறக்கவில்லை. எளிமையே அவரின் மிகப்பெரிய பலம்.