தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று.. படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலி!
தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி: கடற்பகுதியில் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த காற்று வீசிவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து 5 மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றனர்.
காற்றின் வேகத்தால் நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் கென்னடி என்ற மீனவர் கடலில் மூழ்கி பலியானார்.
கடலில் தத்தளித்த மேலும் 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.