மோதிரம், பிரேஸ்லெட்டை வைத்து ராகவேந்திரனின் உடலை அடையாளம் கண்ட பெற்றோர்
சென்னை: பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனின் உடலை அவரது மோதிரம், பிரேஸ்லெட்டை வைத்து அடையாளம் கண்டார்களாம்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜினியர் ராகவேந்திரன் கணேசன் பலியானார்(31).
அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் முதலில் அவரின் பெயர் மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் சென்ற அவரது பெற்றோர் மற்றும் தம்பி தான் அவரின் உடலை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து அவரின் உடல் ஆம்ஸ்டர்டாம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் நேற்று மதியம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. சென்னை அருகே உள்ள சிட்லபாக்கத்தில் இருக்கும் அவரின் மனைவி வைஷாலியின் வீ்ட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ராகவேந்திரனின் உடலை அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் பிரேஸ்லெட்டை வைத்து தான் அடையாளம் காணப்பட்டதாக வைஷாலியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்கரெட் என்பவர் தெரிவித்துள்ளார்.