காதலியை பார்க்க "கவுண்டமணி- சத்யராஜ்" போல் வேடமிட்ட இளைஞர்... சேலத்தில் சிக்கிய சுவாரஸ்யம்
சேலத்தில் காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் நுழைந்ததாக இளைஞர் தெரிவித்தார்.
சேலம்: சேலத்தில் காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டுக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்த கல்லூர் மாணவர் பிடிபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு நேற்று காலை ஆண்டு விழா நடைபெற்றது. இதற்காக போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அந்த நிகழ்ச்சிக்கு பர்தா அணிந்த ஒருவர் பள்ளிக்குள் வேகமாக நுழைந்தார். அவருடைய நடவடிக்கைகளில் பள்ளி காவலாளி சந்தேகம் அடைந்தார். உடனே அவரை மடக்கிபிடித்து அவரது பெயர் மற்றும் என்ன வகுப்பு படிக்கிறார் என்று கேட்டார்.
ஆண் நபர்
அப்போது தயங்கி தயங்கியே அந்த நபர் நின்றுள்ளார். இதையடுத்து பள்ளி காவலாளி சற்று மிரட்டியவுடன் பர்தாவிற்குள் இருந்து ஆண் குரல் கேட்டது. பின்னர் பர்தாவை நீக்கி விட்டு பார்த்த போது அவர் ஆண் என்றும் பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது.
டிப்ளமோ படிப்பு
இதையடுத்து அவரை அங்குள்ள அன்னதானப்பட்டி பேலீஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என்பதும் அவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிப்பதும் தெரியவந்தது.
பர்தா அணிந்த காதலன்
அந்த பள்ளியில் படிக்கும் மாணவியை இந்த இளைஞர் ஓராண்டாக காதலித்து வருகிறார். அவர்தான் தனது பள்ளியில் நடைபெறும் ஆண்டுவிழாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனால் பர்தா அணிந்து கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
நண்பர் கொடுத்த பர்தா
மேலும் அந்த பர்தாவை நண்பர் ஒருவர் வழங்கியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண் ஒருவர் பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.