கிரண்பேடி ஸ்டைலில் கோவையில் ஆட்சியருடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை- வெடிக்கும் சர்ச்சை
கோவை மாவட்ட நிர்வாகத்துடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது.
கோவை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டையில் கோவையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தியுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
மாநிலங்களில் ஆளுநர்களாக பதவி வகிப்பவர்கள் அரசு நிர்வாகங்களில் தலையிடுவது இல்லை. அப்படி தலையிடவும் முதல்வர்கள் அனுமதிப்பதும் இல்லை.
அதுவும் ஆளுநர் பதவி ஆட்டுக்கு தாடி; மாநில சுயாட்சி முழக்கம் ஒலித்த தமிழத்தில் ஆளுநர்கள் அப்படி நினைத்து பார்ப்பது கூட கிடையாது. புதுவையில் யூனியன் பிரதேசம் என்பதால் ஆளுநர் கிரண்பேடி தமது கட்டுப்பாட்டில் நிர்வாகத்தை கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
தற்போது கிரண்பேடி ஸ்டைலில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் கோதாவில் குதித்தார். நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் இது தொடர்பாக நேற்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், கோவை கமிஷனர், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இதில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு பணிகள் குறித்து குறித்து பன்வாரிலால் கேட்டார்.
ஆனால் மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையானது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என கண்டனக் குரல்கள் வலுவாக ஒலிக்கின்றன.