சர்ச்சையான சசிகலா புஷ்பா 2-ம் திருமண விவகாரம்- மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் புகார்!
ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் 2-ம் திருமண விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் 2-வது திருமண விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் ராமசாமியின் மனைவி சத்தியபிரியாதான் இது தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.
சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமி என்பவருக்கும் வரும் 26-ந் தேதி டெல்லியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஆதாரமாக திருமண அழைப்பிதழும் சசிகலா புஷ்பாவின் மாஜி கணவர் லிங்கேஸ்வர திலகனிடம் இருந்து விவாகரத்து வாங்கிய பத்திரமும் வெளியானது.
ஆனால், இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவில்லை. லிங்கேஸ்வர திலகனோ, இந்தத் திருமணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரிடம் நான் பேசி நீண்ட நாட்களாகிறது' என விளக்கம் கொடுத்தார்.
விவகாரத்து உண்மைதான்..
புஷ்பாவின் ஆதரவாளர்களோ, திலகனிடம் இருந்து அவர் விவாகரத்து வாங்கியது உண்மைதான்' என்றதோடு முடித்துக் கொண்டனர். ஏன் இவ்வளவு மர்மமாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும்?' என சசிகலா புஷ்பாவின் நட்பு வளையத்தில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.
அட்வைசர் ராமசாமி
"சட்ட ஆலோகராகவும் நலம் விரும்பியாகவும் வழக்கறிஞர் ராமசாமி இருக்கிறார். நீண்டகாலமாகவே இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. அரசியல்ரீதியாக எந்தவொரு முடிவை எடுக்க வேண்டும் என்றாலும், ராமசாமியிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பார். லிங்கேஸ்வர திலகனிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக டெல்லி கோர்ட்டில் டைவர்ஸ் வாங்கிவிட்டார் சசிகலா புஷ்பா. அவர் பக்கம் அனைத்தும் கிளியராக இருக்கிறது. ஆனால், ராமசாமி தரப்பில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.
அதிரடி அறிவிப்புக்கு தயக்கம் ஏன்?
அவருக்குத் திருமணம் ஆகி, வாரிசு ஒன்று இருக்கிறது. அவரது மனைவி தரப்பில் ஏதாவது பிரச்னை நேரலாம் என்பதால்தான் மௌனம் காக்கின்றனர். இரண்டு தரப்பிலும் ரூட் கிளியராக இருந்திருந்தால், இதை வெளியில் அறிவிப்பதற்கு புஷ்பா தயங்கியிருக்க மாட்டார். ஏனெனில், எதையும் அதிரடியாக அறிவிப்பதற்கு அவர் தயங்கியதே இல்லை. ராமசாமியுடனான திருமணத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதற்கு இதுதான் காரணம்.
டெல்லி செல்வாக்கும் ராமசாமியும்
ராமசாமியைத் திருமணம் செய்யக் காரணமே, பரஸ்பர புரிதல்தான். ஜெயலலிதாவையே எதிர்க்கும் அளவுக்கு டெல்லியில் புஷ்பா பெயர் வாங்குவதற்கும் ராமசாமிதான் காரணம். தனக்கான ஆதரவு வளையத்தை உருவாக்குவதிலும் அவர் வெற்றி பெற்றார். ஒரு பெண் எம்.பி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றார். கனிமொழியே புஷ்பாவை ஆதரிக்கும் சூழல் உருவானது. இதன்பின்னணியில் திட்டம் வகுத்தது ராமசாமிதான். அரசியல்ரீதியான அடுத்தகட்ட பயணத்துக்கும் அனைத்து வகைகளிலும் உதவியாக இருக்கிறார் ராமசாமி. அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடன், குடும்ப ஆட்களிடமும் ஆலோசனை நடத்தினார். ராமசாமி தரப்பின் மௌனம்தான் பல விவாதங்களை ஏற்படுத்திவிட்டது" என்றார் விரிவாக.
மதுரை ஆட்சியரிடம் புகார்
இதனால் டெல்லியில் சசிகலா புஷ்பாவுக்குத் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருக்கும் ராமசாமியின் மனைவி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமது கணவர் மீது பரபர புகாரைத் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.