22 ஆண்டுகளுக்குப் பின் சென்னையை நாசக்காடாக்கிய புயல் !
வர்தா புயல் இன்று பிற்பகல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை மிக சக்திவாய்ந்த புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்தி வாய்ந்த புயல் இன்று தாக்கியது. அந்த புயல் சென்னை துறைமுகம் அருகே பிற்பகலில் கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் சென்னை பழவேற்காடு அருகே 3 மணி முதல் 4 மணிக்குள் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் சீற்றமாக உள்ளது. புயல் கரையைக் கடந்தாலும் அடுத்த 12 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையின் முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் கரையை கடந்தது..
வர்தா புயலால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடந்தது.
22 ஆண்டுகளுக்குப் பின்னர்...
கடந்த 1994-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சென்னை மாநகரை புயல் நேரடியாகத் தாக்கியது. தற்போது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை நேரடியாக புயல் தாக்கியுள்ளது.
ஒரே நாளில் 24 செமீ மழை
அப்போது மணிக்கு 116 கிமீ முதல் 132 கிமீ வரையில் மிக பலத்த காற்று வீசியது. அன்றைய ஒரே நாளில் சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
நிலம் புயல்...
2012-ம் ஆண்டு நீலம் புயல் சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. தற்போதைய புயல் சென்னை துறைமுகம் அருகே கரையக் கடந்துள்ளது. இதனால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.