சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்!
சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது.
உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது.
துறைமுகப் பேரலை:
ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூமிக்கடியில் பிளேட்டுகள் என அழைக்கப்படும் அமைப்புகள் உள்ளன.
நகரும் பாறைகள்:
இதன் மீதே, ஒவ்வொரு கண்டமும், கடலும் உள்ளது. இதைத் தான் டெக்டானிக் பிளேட்கள் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடலடி நிலநடுக்கம்:
இந்த பிளேட்டுகளின் இடம்பெயர்வின் காரணமாக, ஒன்றுடன் ஒன்று மோதும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அவ்வாறு, கடலுக்கடியில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கிறது. இதுமட்டுமல்லாமல், கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கத்தாலும் சுனாமி அலைகள் தோன்றுகின்றன.
பலமுறை தாக்குதல்:
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கி.மு 365 ஆம் ஆண்டே கிழக்கு மத்திய தரைக் கடலில் சுனாமி தோன்றியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பல முறை சுனாமி அலைகள் உலகின் பல பகுதியையும் தாக்கியுள்ளன.
சுனாமி எச்சரிக்கை மையம்:
1949 ஆம் ஆண்டு பசுபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை அமெரிக்கா நிறுவியது. அதன் பிறகு பிற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையை அனுப்புவதற்காக சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அலைகளின் வேகம்:
எச்சரிக்கை மையம் மூலம் சுனாமி உருவாகியுள்ளது மற்ற நாடுகளிலுள்ள அலுவலகங்களுக்கு 3 நிமிடங்களில் சென்று சேரும் என்றாலும், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப்பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
காலதாமதத்தால் வினை:
இது போன்று ஏற்பட்ட காலதாமதமே 2004 ஆம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் அதிக உயிர்களையும், பொருட்களையும் இழந்ததற்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.