இப்படி ஒரு அழைப்பை.. அன்பை.. சத்தியமாக எங்கேயுமே பார்த்ததில்லீங்க
வித்தியாசமான ஒரு பத்திரிகை அனைவரையும் ஈர்த்துள்ளது.
Recommended Video
சென்னை: ஒரு வித்தியாசமான பத்திரிகையின் செய்திதான் இது. அந்த பத்திரிகை, தினசரி பத்திரிகையோ, வார பத்திரிகையோ அல்ல... அது ஒரு கல்யாணம், காது குத்து பத்திரிகையோ இல்லை... இது ஒரு கிரஹப்பிரவேசம் அதாவது புதுமனை புகுவிழா பத்திரிகை பற்றின செய்திதான்.
வீட்டை கட்டினவங்க எல்லாருமேதான் பத்திரிகை வச்சி எல்லாரையும் கூப்பிடுவாங்க. ஆனா இவர் (இவர் பெயர் தெரியவில்லை.. வாட்ஸ் ஆப்பில் பார்த்த அழைப்பிதழ் இது) வித்தியாசமாக ஒரு சுவாரஸ்யமாக பத்திரிகையை அடிச்சிருக்கார்.
உள்ளே அழைக்கிறது
கலர் கலரா, புது புது டிசைன்களில் இல்லாமல் மிக எளிமையாக அந்த பத்திரிகை நம்மை உள்ளே பிரித்து பார்க்க அழைக்கிறது. "கல்யாணத்தை பண்ணிப் பாருங்க... வீட்டக் கட்டிப் பாருங்கன்னு சொல்வாங்க. கல்யாணம் பண்ணிட்டோம். இப்போ வீட்டயும் கட்டிட்டோம்" இப்படித்தான் வரிகள் ஆரம்பிக்கின்றன.
அன்பை குழைத்துள்ளார்
பிறகு, குறிப்பிட்ட நேரத்தை சொல்லி, "எல்லாரும் வந்துடுங்க. விடியற்காலை வரமுடியாதவங்க, விடிஞ்சதுக்கு அப்புறம்வந்து எங்க சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம். உங்களை வரவேற்க வாசலில் நானும் என் மனைவியும் எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம்... வருவீங்கல்ல..." என்று அன்பைக் குழைத்து அழைக்கிறார்.
பஞ்சாயத்தே இல்லை
இதுக்கு அப்புறம்தான் ஹைலைட்டே... பொதுவா நாம பத்திரிகை அடிச்சாலே இந்த சொந்தக்காரங்க தொல்லை தாங்க முடியாது. என் பேர் விட்டு போச்சு, உன் பேர் விட்டு போச்சு, என் பேர் ஏன் இவ்ளோ கீழே போட்டிருக்கே? என் பேர் எதுக்கு இவ்ளோ சின்னதா போட்டிருக்கே? இப்படிப்பட்ட பஞ்சாயத்துதான் இருக்கும். ஆனால் இதில் எந்த உறவினர்கள் பெயர்களும் இல்லை.
தொழிலாளர்கள்
"வியர்வை சிந்தி உதவிய உள்ளங்கள்"... அப்படின்னு ஒரு தலைப்பு போட்டுட்டு மேஸ்திரியிலிருந்து கொத்தனார்கள் வரை, வீடு கட்டிய உதவியவர்களின் பெயர்கள் உள்ளது. அப்போகூட இன்ஜினியர் போன்ற பெரிய ஆட்கள் எல்லாம் இல்லை. எல்லாமே தொழிலாளர்கள்தான். அவர்கள் சொன்னதுபோல் வியர்வை சிந்தியவர்கள் பெயர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது.
உயிர் இல்லை
மணல், ஜல்லி எடுக்கும் கம்பி கட்டுனர், தச்சர், பெயிண்ட் அடிச்சவர், தரைக்கு கல் போட்டவர், வாசற்கதவு கொடுத்தவர், இவங்களுக்கு வீடு கட்ட உதவி செய்த பைனான்சியர் வரைக்கும் பெயர் போட்டிருக்காங்க. உதவி செய்தவர்களில் இன்னொரு பெயரும் போட்டிருக்காங்க. ஆனா அந்த பெயருக்கு உயிர் இல்லை. அது என்ன தெரியுமா? "பலதரப்பட்ட நகைகள்" என்று அந்த பெயர்தான் கடைசியா இடம் பெற்றிருக்கு.
உயிர் கொடுத்த வீடு
இப்படி வீடு கட்ட தனக்கு உதவியமைக்காக நன்றியை பத்திரிகைகளில் வெளிப்படுத்தி இருக்கும் பாங்கு வினோதமானது! வித்தியாசமானது! வரவேற்கத்தக்கது! மதிக்கத்தக்கது! வெறும் செங்கல்லும் சிமெண்ட்டும் வைத்து கட்டப்பட்ட உயிரற்ற வீடாக இருந்தாலும் இந்த பத்திரிகை அந்த வீட்டுக்கு ஒரு உயிரையே கொடுத்து விட்டது.. ஜீவிதமான அந்த வீடு நம் உணர்வையும் தொட்டு விட்டது.