பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் சில்மிசம்... டாக்டர் கைது
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் ஸ்கேன் மையம் நடத்தி வருபவர் டாக்டர். தயானந்தன். இவரது ஸ்கேன் மையத்திற்கு சிறுமுகையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிசோதனைக்காக நேற்று காலை சென்றுள்ளார். அப்போது, ஸ்கேன் எடுக்கும் போது அந்த பெண்ணிடம் தயானந்தன், தவறாக நடந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த கர்ப்பிணி பெண் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் தயானந்தன், கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தயானந்தனை கைது செய்த போலீசார், அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு தயானந்தனை 15-நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, தயானந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.