ராமேஸ்வரம் மணிமண்டபத்தில் மக்கள் ஜனாதிபதி கலாமின் காலத்தால் அழியாத ஓவியங்கள்
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் மக்கள் ஜனாதிபதியின் புகழை பறைசாற்றும் வகையில் காலத்தால் அழியாத ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம்: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் மணிமண்டபத்தில் மக்களை கவரும் வகையில் கலாம் பயன்படுத்திய புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்தைப் பிரதமர் மோடி ஜூலை 27ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நினைவு மண்டபத்தில் கலாம் நினைவுகளை பறைசாற்றும் காலத்தால் அழியாத ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஷில் லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அவரது உடல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கலாம் மணிமண்டபம்
அப்துல்கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்பில் மணி மண்டபம் கட்டப்படும் என 2015ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி கலாமின் 84-வது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அறிவித்தார். தொடர்ந்து கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடக்கப்பட்டன.
ஜூலை 27ல் திறப்பு
பேக்கரும்பில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கலாம் நினைவிடத்தில் அருங்காட்சியகம், பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி கலாமின் 2-ம் ஆண்டு நினைவுநாளான வரும் ஜூலை 27ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
700 புகைப்படங்கள்
இந்த மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சுமார் 700 புகைப்படங்களும், 91 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. அவருடைய இளமை பருவம், பள்ளியில் படித்தது, விஞ்ஞானியாக பணியாற்றியது, ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டது, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டது, மாணவர்களுக்கு பாடம் எடுத்தது, ஜனாதிபதியாக பதவியேற்று சாரட் வண்டியில் வந்தது ஆகிய முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
காலத்தால் அழியாத ஓவியங்கள்
ஒரே ஓவியத்தில் 50 முகத்தோற்றம் கொண்ட சிறப்பு ஓவியமும் இடம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் 12 பேர் அடங்கிய குழு இரவு பகலாக இந்த ஓவியங்களை வரைந்துள்ளனர். இதற்கான பெயிண்ட் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது. இவற்றை காலத்தால் அழியாத வகையில் வரைந்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று இந்த ஓவியங்களை வரைந்த ஓவியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
பசுமை சூழ்ந்த மணிமண்டபம்
கலாம் மணிமண்டபம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாமின் பொன் மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவரது மார்பளவு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் வெளிப்புறம் பசுமை சூழ்ந்துள்ளது.
மக்கள் அஞ்சலி
ராமேஸ்வரம் என்ற புண்ணிய பூமிக்கு சென்று அக்னி தீர்த்த கடலில் நீராடிய இறைவனை தரிசனம் செய்த பின்னர் கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அக்னி சிறகுகள் எழுதிய ஏவுகணை நாயகனை வணங்க ஏற்ற வகையில் அவர் அமைதி துயில் கொள்ளும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.