பஸ் கட்டண உயர்வு கெடக்கட்டும்... மதுபான விலையை குறையுங்கள்... தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராடி வரும் நிலையில் திருப்பூரை சேர்ந்த ஒருவர் மதுபானங்களின் விலையை குறைக்க கோரி செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
திருப்பூர்: தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரை சேர்ந்த இளைஞர் மதுபானங்கள் மீது அரசு நிர்ணயித்த விலைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மேலும் சில கட்சிகள் போராட்டம் நடத்த அறிவித்துள்ளன.
இந்நிலையில் திருப்பூர் அருகே காங்கேயம் சாலை புதூர் பிரிவு பகுதியில் சபீர் என்ற இளைஞர் ஒருவர் தனியார் நிறுவன செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் போது போலீஸார் பணம் வசூலிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சபீரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கச் செய்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் அடிப்படை தேவையான பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த இளைஞர் மதுபான விலை குறைக்கக் கோரி போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.