நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு - இரண்டு குழந்தைகளுடன் குடும்பமே தீக்குளிக்க முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை: சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் குடும்பமே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து பலியானது தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு தீக்குளிப்பு முயற்சி நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மரந்தை ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்.
இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்ய பிரியாதர்சனி. இவர்களுக்கு கார்த்திக், கவ்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர் மாலை குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது போலீசார் அவரிடம் சோதனை நடத்திப் பார்த்தனர். அவர்களிடம் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார், வெளியே சென்று விஷம் மற்றும் கெரசினை வாங்கி கொண்டு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவர்கள் இருவரும் விஷம் குடித்து விட்டு கெரசினை தங்கள் மேல் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பாய்ந்து வந்து அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களது சொத்துகளையும் ரொக்கப் பணத்தையும் அபகரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியே ஆட்சியரிடம் அசோக்குமார் குடும்பத்துடன் வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. தீக்குளிக்க முயற்சித்த அசோக்குமார் தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.