தூங்கிக்கொண்டிருந்த இளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்.. வேலூரில் பரபரப்பு!
வேலூர் அருகே இளைஞரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வேலூர்: திருப்பத்தூர் அருகே வாலிபரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் இவரது மகன் சதீஷ். 21 வயதான இவர் திருப்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 17 வயது மகள் சுமதி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பேச்சை நிறுத்திய காதலன்
இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சதீஷின் பெற்றோர் காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக சதீஷ் சுமதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
நள்ளிரவு 12 மணி
இதனால் விரக்தியடைந்த சுமதி, சதீஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சதீஷ் தனது வீட்டில் துாங்கி கொண்டு இருந்தார்.
கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி
அப்போது சக்கர குப்பத்தை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் சதீஷை உடனே நீ எழுந்து வா என கூறி சதீஷை சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு காத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் சதீஷ்
கட்டாய திருமணம்
பின்னர் சதீஷை, சுமதியின் கழுத்தில் தாலி கட்டச்சொல்லி அவரை மிரட்டி சுமதியின் கழுத்தில் கட்டாய தாலிகட்ட வைத்துள்ளனர். பின்னர் இருவரையும் சுமதி குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
போலீஸில் புகார்
மறுநாள் காலை தனது மகனுக்கு கட்டாய திருமணம் நடைபெற்றதை அறிந்த சதீஷின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக சுமதியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்கள் மகனை மீட்டு தரக்கோரி சதீஷின் தந்தை திருப்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெரும் பரபரப்பு
மைனர் பெண்ணுக்கு, பெண்ணின் குடும்பத்தினரே காதலித்த இளைஞரை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.