செங்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் விவசாயி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு!
நெல்லை அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் வேதனையடைந்த விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: செங்கோட்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரிய விவசாயியிடம் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேதனையடைந்த விவசாயி தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் கணக்குகளை சரிபார்க்க ஆண்டுதோறும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் விவசாய நிலம், தரிசு, புறம்போக்கு நிலம், பட்டா உரிமையாளர் உள்ளிட்ட 22 வகையான கணக்குகள் சரிபார்க்கப்படுவது வழக்கம்.
செங்கோட்டை தாலுகா அலுவலக குறுவட்டங்களில் கடந்த மே 19ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியது.
நேற்று முன்தினம் பண்பொழிகுறு வட்டம் பெரிய பிள்ளை வலசை தேன் பொத்தை, மேக்கரை ,வடகரை ,கணக்கப்பிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளின் கணக்குகள் சரிபார்க்கபட்டன,
4 ஆண்டுகளாக போராடும் முதியவர்
மேலும் ரேஷன் அட்டை, மண்ணென்னெய் வேண்டி, வறட்சி நிவாரணம் கோரியும், பட்டாமாறுதல், உட்பிரிவு மாறுதல் போன்ற 187 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றார். இதில் கணக்கப் பிள்ளை வலசை கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி வேம்புமாரி என்ற முதியவர் பட்டா மாறுதலுக்கும் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் மனு அளித்துள்ளார்.
லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
அவரது நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் பட்டா மாறுதலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளனர். தொடர்ந்து அவர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி
இந்நிலையில் இன்று செங்கோட்டை,கற்குடி,புதூர், புளியரை பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைப்பெற்றது. இதில் நெல்லைமாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்துகொண்டார்.
அலையவைக்கும் அதிகாரிகள்
அப்போது அந்த முதியவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலையவைத்து பணம் கேட்பதாக முறையிட்டார். இல்லை தான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் விவசாயி திருப்த்தியடையவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற 10 நிமிடத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் பெட்ரோலை தலையில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார்.
பெரும் பரபரப்பு
அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த செங்கோட்டை போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.