செங்கத்தில் அடுத்தடுத்து பதற்றம்.. விவசாயி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு!
சேலம் - சென்னை இடையே 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பதை கண்டித்து செங்கத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: சேலம் - சென்னை இடையே 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பதை கண்டித்து செங்கத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் - சென்னை இடையேயான 8 வழி பசுமை சாலை
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயி இளங்கோ
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிகாரிகள் இன்று நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளங்கோ என்பவரின் நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
தாக்கிய போலீஸ்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோ போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிணற்றில் குதித்த விவசாயிகள்
இதையடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்ட போலீசார் அவரை கைது செய்தனர். நிலம் எடுப்பதை கண்டித்து சற்று நேரத்திற்கு முன்பு 2 விவசாயிகள் கிணற்றில் குதித்தனர்.
பெரும் அதிர்ச்சி
அவர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த பாதுகாப்புடன்
இதையடுத்து கிணறு உள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலத்த பாதுகாப்புடன் நிலத்தை அளக்கும் பணி நடைபெற்று வருகிறது.