சொத்து தகராறில் பட்டப்பகலில் தந்தை மகள் கார் ஏற்றி கொலை.. தேனி அருகே பயங்கரம்!
தேனி அருகே சொத்து தகராறில் பட்டப்பகலில் தந்தை மகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தேனி: ஆண்டிபட்டி அருகே சொத்துத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மகளை காரை ஏற்றி உறவினரே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காரை ஏற்றி கொலை செய்த ரமேஷ் குமாரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.
செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ரமேஷ்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்துத்தகராறு இருந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டைபோட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆட்சியரிடம் புகாரளித்த செல்வராஜ்
ரமேஷ்குமார் தொடர்ந்து பிரச்சனை செய்து வருதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் செல்வராஜ், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அலட்சியம் காட்டிய காவல்துறை
இதுதொடர்பாக கண்டமனூர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் செல்வராஜ். ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
காரை மோதிய ரமேஷ்
இந்நிலையில் இன்று காலையில் செல்வராஜ் தனது மகளுடன் டீக்கடையில் வேலையை செய்துகொண்டிருந்தார். அப்போது, ரமேஷ்குமார் தனது அம்பாசிடர் காரில் படுவேமாக வந்து டீக்கடைக்குள் மோதினார்.
தந்தையும் மகளும் பலி
இதில் செல்வராஜ் மற்றும் அவரது மகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த செல்வராஜின் மனைவி தனது கணவர் மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறியழுதது அங்கு திரண்டிருந்தவர்களை கலங்க வைத்தது.
ரமேஷ்குமாருக்கு வலைவீச்சு
இந்த கொடூர கொலை குறித்து தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தப்பியோடிய ரமேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
ரமேஷ்குமார் குறித்து ஏற்கனவே செல்வராஜ் புகார் அளித்திருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்று 2 உயிர்கள் அநியாயமாக பறிபோக காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உறவினரே வெறிச்செயல்
இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சொத்துப்பிரச்சனையில் உறவினரே தந்தை மற்றும் மகளை கார் ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.