வேலூர் அருகே குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை.. கடன் தொல்லை காரணம் இல்லையாமே!
வேலூர் அருகே மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில் கணவர் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
வேலூர்: வேலூர் அருகே மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில் கணவர் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
வேலூரை அடுத்த மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 36 வயதான இவர் ஆற்காட்டில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு 32 வயதான கமலா என்ற மனைவி உள்ளார். இவர் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மேகலா என்ற 9 வயது மகளும் திவ்யகலா என்ற 7 வயது மகளும் இருந்தனர். இருவரும் வரிசையே 4 மற்றும் 2ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
கதறிய மனைவி
இந்நிலையில் தந்தை வெங்கடேசன் நேற்று இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். மாலை வியாபாரத்தை முடித்து விட்டு வந்த கமலா குழந்தைகளும் கணவரும் சடலமாக கிடப்பதை கண்டு கதறி கத்தி கூச்சலிட்டார்.
பிரேத பரிசோதனை
இதனைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை கடிதம்
முதலில் கடன் பிரச்சனையே வெங்கடேசன் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெங்கடேசன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
மனைவியுடன் தகராறு
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசனுக்கும், கமலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வேலைக்கு சென்றதால் விபரீதம்
கமலா வேலைக்குச் செல்வது வெங்கடேசனுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் வெங்கடேசன் மனமுடைந்து காணப்பட்டார்.
கழுத்தை நெரித்து கொலை
இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் வெங்கடேசன் தன்னுடைய இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, வீட்டில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.