டெங்கு குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆட்சியர் விரட்டியடிப்பு.. பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு
வேலூரில் டெங்கு குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆட்சியரை பெண் மருத்துவர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: டெங்கு குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆட்சியரை பெண் மருத்துவர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதனால் நாள்தோறும் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் என டெங்கு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், சிஎம்சி காலனியில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஆட்சியர் அனுமதியின்றி நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த வீட்டில் இருந்த பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் அனுமதியின்றி எப்படி நுழையலாம் என்று ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.
இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்யாமல் ஆட்சியர் அங்கிருந்து கிளம்பினார். ஆட்சியரை விரட்டிய அந்தப் பெண்ணின் பெயர் ஜூலி என்றும் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகின்றார் என்றும் தெரியவந்துள்ளது.
வீட்டில் அவரும் அவரது பாட்டியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் சுகாதார மேற்பார்வையாளர் சசிக்குமார் புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
294 பி, பணி செய்ய விடாமல் தடுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெண் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் மருத்துவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது.