தஞ்சையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 13 குடிசைகள் சாம்பல்.. ரூ.15 லட்சம் பொருட்கள் கருகின!
கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 13 குடிசைகளும் எரிந்து சாம்பலாயின.
தஞ்சை: ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அடுத்தடுத்து இருந்த 13 குடிசை வீடுகளும் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
தஞ்சை மேற்கு எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது வீட்டில் இன்று காலை எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீயானது மளமளவென அடுத்தடுத்த குடிசை வீடுகளுக்கும் பரவின.
இதனால் குடிசைகள் தீப்பற்றி எரிவதை கண்ட வீட்டிலிருந்தோர் தங்கள் குழந்தைகளுடன் அணைத்துக் கொண்டு பதறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் அனைவரும் பாதுகாப்பாக தற்போது உள்ளனர். இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்து அவர்கள் மளமளவென எரிந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் தீயில் 13 குடிசை வீடுகளும் எரிந்து சாம்பலானதுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து, தஞ்சை மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.