போலீசார் விரட்டியதால் கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
போலீசார் விரட்டியதால் கடலில் குதித்த சென்னை காசிமேடு மீனவர் உயிரிழந்தார்.
சென்னை: போலீசார் விரட்டியதால் கடலில் குதித்த சென்னை காசிமேடு மீனவர் உயிரிழந்தார்.
போலீசாரின் அத்துமீறலால் உயிரிழக்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் போலீஸ் விரட்டியதால் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் சிலர் நேற்றிரவு சூதாடியதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து சென்ற போலீசார் அவர்களை பிடிக்க விரட்டிச்சென்றனர்.
இதையடுத்து மீனவர்கள் தப்பியோடினர். அப்போது தமிழரசன் என்ற மீனவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கடலில் குதித்தார்.
இதில் மாயமான மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் தமிழரசனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தமிழரசனின் மரணத்துக்கு போலீசார் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.