கொடநாடு பங்களாவிற்கு பொலிரோ ஜீப்பில் வந்து அள்ளிக்கொண்டு போன மர்மநபர்கள் யார்? தேடும் போலீஸ்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிற்குள் வந்த இரண்டு பொலிரோ ஜீப்புகள் யாருடைவை என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொன்று விட்டு உள்ளே இருந்த ஆவணங்களை அள்ளிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
10 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு இரண்டு மணிக்கு இரண்டு பொலிரோ ஜீப்பில் உள்ளே நுளைந்துள்ளனர். யார் அவர்கள், அந்த ஜீப்புகள் யாருக்கு சொந்தமானவை என்று போலீசார் தே வருகின்றனர்.
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த 3 சூட்கேஸ் ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இருவரின் அறைகள் மற்றும் அதிலிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்டுள்ள சூட்கேஸ்கள் காலியாக இருந்ததால் அதிலிருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளது.
பங்களாவின் முன்பு இருந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் பாதுகாக்கப்படும் அறையில் இருந்த சில ஆவணங்களையும் ஜீப்பில் வந்த கும்பல் எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து கோத்தகிரியில் இருந்தும், நீலகிரியில் இருந்தும் வெளியே செல்லும் வழிகள் அனைத்தையும் போலீசார் சீல் வைத்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.