சென்னை ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்த மாணவி மர்ம மரணம்!
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிப்பதற்காக தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த சேலம் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆத்தூர்: சென்னையில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிப்பதற்காக சென்னைக்கு வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவி காயத்ரி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
சென்னை சிஐடி நகரில் உள்ளது சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி அகாதெமி. இங்கு ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், மாணவிகளுக்கு தங்கும் இடமும், உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இங்கு பல்வேறு நிபுணர்களை கொண்டு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் ஆத்தூர் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வந்தார். இதற்காக தனியார் விடுதி ஒன்றில் (ஐஏஎஸ் பயிற்சி அகாதெமிக்கு சொந்தமானதல்ல) தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லை என்று சகமாணவிகளிடம் கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி காயத்ரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை கண்டித்தும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் சொந்த ஊரான தங்கமாபுரிபட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சு நடத்தி வருகின்றனர்.
சைதை துரைசாமி விளக்கம்
மாணவி மரணம் குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒன் இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், மாணவி காயத்ரி எங்கள் பயிற்சி மையத்தில்தான் படித்து வந்தார். ஆனால் அவர் தனியார் விடுதியில்தான் தங்கியிருந்தாரே தவிர, எங்கள் விடுதியில் அல்ல. மேலும் மாணவியின் மரணத்துக்கும் எங்கள் பயிற்சி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.