மெட்ரோ சுரங்க பணியால் வீட்டுக்குள் குபுகுபுவென வெளியேறிய சிமென்ட் கலவை.. மக்கள் மறியல்
மெட்ரோ ரயில் சுரங்க பணியால் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிமென்ட் கலவை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: மெட்ரோ ரயில் சுரங்க பணியால் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிமென்ட் கலவை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளால் பாண்டி பஜார், ராஜீவ் காந்தி மருத்துவமனை, சர்ச் பார்க் கான்வென்ட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மெட்ரோ பணிகளின் போது பள்ளங்கள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து அண்ணா சாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் 10 அடி ஆழம் கொண்ட மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டது. இதில் பேருந்தும், காரும் கவிழ்ந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இப்படி அண்ணா சாலையை திகிலோடு கடந்து செல்லும் நிலையில் நேற்று ஸ்டான்லி மருத்துவமனை அருகே பள்ளம் ஏற்பட்டது.
தற்போது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியால் முகமது யூசுப் என்பவரது வீட்டில் தரையில் இருந்து சிமென்ட் கலவை வெளியேறியது. இதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு வெளியேறினர். அக்கம்பக்கத்தினரும் பீதி அடைந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மெட்ரோ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.