செல்போனில் அதிகநேரம் பேசிய மனைவி.. கள்ளக்காதலா.. சந்தேகத்தில் அடித்துக்கொன்ற கணவன் கைது
ஈரோடு அருகே செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு: பவானி அருகே செல்போனில் மனைவி அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த கணவன் அவரை இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்றார். தலைமறைவாக இருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவியின் பெயர் சித்ரா.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஓராண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மகனுடன் சென்ற மனைவி
மகனுடன் தனியாக வசித்து வந்த சித்ரா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சண்முகம் வாரத்திற்கு ஒருமுறை தனது மகனை பார்க்க சித்ராவின் வீட்டிற்கு வருவார்.
மீண்டும் வந்த கணவன்
கடந்த வாரம் சண்முகம் வீட்டிற்கு வந்தபோது சித்ரா நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகனை பார்க்க சண்முகம் மீண்டும் சித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
போனிலேயே பேசிக்கொண்டிருந்த மனைவி
அப்போதும் சித்ரா செல்போனில் பேசியபடியே இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரும்புக்கம்பியால் அடித்துக்கொலை
அப்போது சித்ராவின் முரண்டான பதிலால் ஆத்திரமடைந்த சண்முகம் வீட்டில் இருந்த இரும்புக்கம்பியால் சித்ராவை தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தலைமறைவான கணவனுக்கு வலை
இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற சண்முகம் தலைமறைவானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை தேடி வந்தனர்.
வாகன சோதனையில் சிக்கிய சண்முகம்
இந்நிலையில், கூடுதுறை பகுதியில், பவானி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த சண்முகம் அவர்களிடம் சிக்கினார். விசாரணையில், தன மனைவியின் நடத்தை சரியில்லாததால் மனைவியை கொன்றதாக சண்முகம் ஒப்புக் கொண்டார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து சண்முகத்தை கைது செய்த போலீசார் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சண்முகம் சிறையில் அடைக்கப்பட்டார்.