கருணாநிதியை சந்திக்க 22ம் தேதி சென்னை வரும் ஏ.கே. அந்தோணி- மீண்டும் கூட்டணி பேச்சு?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி 22-ந் தேதி சென்னை வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை கடந்த ஆண்டு திமுக விலக்கிக் கொண்டது. அத்துடன் காங்கிரஸுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது. அப்போது முதலே இனி எக்காலத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுகவில் ஸ்டாலின் தரப்பு உறுதிபட தெரிவித்து வருகிறது.
இதன் எதிரொலியாகவே டிசம்பர் 15-ந் தேதியன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுகவில் கனிமொழி, தயாநிதி மற்றும் மு.க. அழகிரி தரப்பு எப்படியாவது திமுக-காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.
குலாம் நபி - கருணாநிதி சந்திப்பு
இவர்களது முயற்சியாலேயே மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு சென்றார்.
திருமா, கனிமொழியின் டெல்லி சந்திப்புகள்
அதன் பின்னர் திமுகவின் கூட்டணி தூதர் திருமாவளன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி சந்தித்து பேசினார். இதனால் நிச்சயமாக திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்றே கூறப்பட்டது.
முற்றுப்புள்ளி வைத்த திருச்சி மாநாடு
ஆனால் திருச்சி திமுக மாநாட்டில் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக பொதுக்குழுவில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்ததன்படியே செயல்படுவோம் என்று ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் உறுதிபட பேசினர்.
மரியாதை நிமித்த சந்திப்பு
அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியும் திமுக- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்றும் கனிமொழி-சோனியா சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் கூறினார்.
காங்கிரஸுக்கு அழைப்பா?
இருப்பினும் மதவாதத்துக்கு எதிரானவர்களும் சேது கால்வாய் திட்டத்தை ஆதரிப்போரும் திமுக கூட்டணியில் இணையலாம் என்று திருச்சி மாநாட்டில் கருணாநிதி அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை தங்களுக்கான சமிக்ஞை என காங்கிரஸ் கருதுகிறது.
அந்தோணி சென்னை வருகிறார்
இதைத் தொடர்ந்து சோனியாவின் தூதராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி இம்மாதம் 22-ந் தேதி சென்னை வருகிறார். அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் தேர்தல் பிரசாரத்துக்கே நான் போகமாட்டேன்.. பொதுக்குழுவின் முடிவை மீறி அப்படி ஒரு கூட்டணி அமைய வேண்டும் என விரும்புவோரை வைத்து தேர்தலை சந்தித்துக் கொள்ளுங்கள் என கருணாநிதியிடம் ஏற்கெனவே ஸ்டாலின் எச்சரித்திருக்கிறாராம்.
உருவாகுமா திமுக- காங். கூட்டணி?
இந்த நிலையில் ஏ.கே.அந்தோணி 22-ந் தேதி சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்குறி இருக்கவே செய்கிறது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.