சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா மாற்றம்! புதிய ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம்!
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக ஏ.கே. விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த கரன் சின்ஹா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏகே விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கமிஷனராக ஜார்ஜ் பதவி வகித்து வந்தார்.
சசிகலாவின் ஆதரவாளர் என்பதால் ஜார்ஜ் அப்பதவியில் நீடித்தால் தேர்தல் ஜனநாயக முறைப்படி, நியாயமாகவும் நடைபெறாது என்று திமுக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பே ஜார்ஜ் சென்னை கமிஷனர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பின்னர் கரன் சின்ஹா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கரன் சின்ஹா மாற்றப்பட்டு போலீஸ் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டார்.
சென்னை காவல் துறை புதிய ஆணையராக ஏ.கே.விசுவநாதன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் கரன் சின்ஹா சிறப்பாக செயல்பட்டார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை மிரட்டியதாக புகாரின் பேரில் அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.