மணல் கடத்தல் குறித்து போலீஸுக்கு துப்பு.. அரிசி வியாபாரியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்!
திருவள்ளூர் அருகே அரிசி வியாபாரியை காரில் கடத்தி கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணல் கடத்தல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறி அரிசி வியாபாரியை காரில் கடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரிடம் கடந்த சனிக்கிழமை ஜான் என்பவர் போனில் தொடர்பு கொண்டு, பேச வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ஜானை சந்திக்க சென்ற ஏழுமலையை, அங்கு ஏற்கனவே காத்திருந்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சாய், பாலாஜி, மைக்கேல், டேவிட் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் இன்னோவா காரில் காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்
அப்போது மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கொடுத்தாயா? எனக் கூறி ஏழுமலையை அந்த கும்பல் பலமாக தாக்கியுள்ளது.
சீத்தஞ்சேரி என்ற இடத்திற்கு சென்ற அந்த கும்பல், அப்போதும் ஆத்திரம் தீராமல் பலமாக தாக்கியதுடன் இங்கேயே ஏழுமலையை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் சாய் என்பவரின் உறவினர் ஒருவர் இருப்பதாகவும், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரிடம் கொண்டு செல்லலாம் எனவும் கூறி அங்கிருந்து ஏழுமலையை அழைத்துச் சென்றுள்ளனர்.
விடியற்காலை 3 மணியளவில் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள மாதா கோயில் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, தனக்கு தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி காரிலிருந்து இறங்கிய ஏழுமலை, திடீரென கூச்சலிட்டபடியே சாலையில் ஓடினார்.
இதனால் அங்கு படுத்திருந்தவர்கள் ஏழுமலையின் சத்தம் கேட்டு விழித்து, கடத்தல்காரர்களை விரட்டினர். ஆனால் 7 பேர் கொண்ட கும்பல் யாரிடமும் சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதனையடுத்து கோயில் பாதிரியார் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏழுமலையை ஒப்படைத்தார்.
இது குறித்து தகவலின் பேரில் திருவள்ளூர் நகர காவர் ஆய்வாள் வெங்கடேசன் நேரில் சென்று ஏழுமலையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மணல் கடத்தல் குறித்து தகவல் கொடுத்ததாக கூறி தன்னை 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.