கால்வாயிலிருந்து மீண்ட "சுதந்திரம்".. தாய்ப்பால் தந்த பெண்.. தானத்தை வலியுறுத்தி கோரிக்கை!
Recommended Video
சென்னை: கால்வாயில் வீசப்பட்ட குழந்தை சுதந்திரத்துக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் பேஸ்புக்கில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ வெங்கடேச சுப்பிரமணிய நகரில் 6-ஆவது தெருவில் சுதந்திரத் தினத்தன்று தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் சாக்கடையில் ஒரு ஆண் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அப்பகுதியில் வசிக்கும் சீரியல் நடிகை கீதா என்பவர் கண்டுபிடித்தார். பின்னர் அந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். இதையடுத்து அக்குழந்தையை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அந்த குழந்தையை தினந்தோறும் சென்று பார்த்துவிட்டு வருகிறார் கீதா.
பேஸ்புக்
மேலும் அக்குழந்தையை தத்தெடுக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க எழும்பூர் மருத்துவமனைக்கு சென்ற பிரியா சேகர் என்பவர் பேஸ்புக்கில் 27-ஆம் தேதி ஒரு நெகிழ்ச்சியான பதிவை போட்டுள்ளார்.
கடினமாக உள்ளது
அதில் அவர் கூறுகையில் குழந்தை சுதந்திரத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக நான் இன்று எழும்பூர் மருத்துவமனைக்கு 10.15 மணிக்கு சென்றேன். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் சுதந்திரம் எங்கு உள்ளார் என்பது குறித்து கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருந்தது.
பம்ப் மூலம் பால்
இதையடுத்து 10.40 மணிக்கு எழும்பூர் மருத்துவமனைக்கு பின்னால் உள்ள ஐசிஎச் மருத்துவமனையில் ஏ பிளாக்கில் முதல் தளத்தில் சுதந்திரத்தை வைத்துள்ளனர். அங்குள்ள பேட்ரீசியா என்ற செவிலியரிடம் குழந்தைக்கு பால் கொடுக்க வந்துள்ளதாக கூறினேன். அப்போது அவர் என்னை தாய்ப்பால் வங்கிக்கு அனுப்பி அங்குள்ள எலக்ட்ரிக் பம்ப் மூலம் பாலை எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தினார்.
5 நிமிடங்கள் பேசினேன்
இதையடுத்து சுதந்திரத்தை பார்வையிட வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் தலைமை மருத்துவர் அனுமதியில்லாமல் குழந்தையை பார்க்க அனுமதி கிடையாது என்று கூறினார். பின்னர் செவிலியர் அகிலாவுடன் தலைமை மருத்துவரை சந்தித்து 5 நிமிடங்கள் பேசினேன்.
தாய்ப்பால் தானம்
இதைப் படிக்கும் அனைவரையும் இந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இங்குள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் போதுமான தாய்ப்பால் இல்லை. வருத்தமான செய்தி என்னவெனில், தாய்மார்கள் தனியார் மருத்துவமனைக்குத் தாய்ப்பாலை தானமாக அளிக்கின்றனர். அது பணத்துக்கு விற்கப்படுகிறது.
காப்பகத்தில் குழந்தை தத்து
அதனால் நீங்கள் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று தாய்ப்பாலை தானமாக அளிக்கலாம். அங்குள்ள செவிலியர் எனக்கு அவருடைய போன் நம்பரை கொடுத்துள்ளார். நீங்கள் அங்கு சென்று எனது பெயரை கூறி தாய்ப்பாலை தானம் செய்யுங்கள். அங்குள்ள காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விருப்பப்படுவோர் தத்தும் எடுத்துக் கொள்ளலாம் என்று பதிவு செய்துள்ளார்.