பெட்ரோல் பங்குகளில் குவியும் கூட்டம்... ரூ.500க்கு பெட்ரோல் விற்கும் விற்பனையாளர்கள்
500ரூபாய் நோட்டுக்களை பெட்ரோல் பங்குகளில் கொண்டு சென்று மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என்று அமலுக்கு வந்திருக்கிறது. நேற்று இரவே பெட்ரோல் பங்க்குகளில் சென்னை முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. இன்று காலையிலும் பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் கொடுத்து மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். 500 ரூபாய்க்கும் மொத்தமாக பெட்ரோல் போட வற்புறுத்துவதால் பொதுமக்களுக்கும் பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மோடியின் அறிவிப்பால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒருவித பதற்ற நிலையே நீடிக்கிறது. பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 11வரை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினாலும், ஒட்டு மொத்த கூட்டமும் ஒரே நாளில் குவிந்தது.
500 ரூபாய் வாங்க மறுப்பு
பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுக்களை நீட்டி, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு சில்லறை கேட்பவர்களுக்கு கொடுக்க முடியாது என்றும் வேண்டுமானால் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுச் செல்லுங்கள் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் பங்குகள்
மோடியின் திடீர் அறிவிப்பின் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றே கூறப்படுகிறது. ரூ.100, ரூ.200 க்கு போடும்படி கேட்டால் பல பெட்ரோல் பங்குகளில் போட மறுப்பதாகவும், கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி பலரும் கொள்ளையடிக்கின்றனர் என்றே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் கொதிப்பு
என்னுடைய வாகனத்திற்கு அதிகபட்சம் 300 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடமுடியும், 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னால் என்ன செய்வது என்று கேட்கின்றனர் ஆட்டோ டிரைவர்கள். கார்களில் வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி பெட்ரோல், டீசல் போட்டுச்செல்கின்றனர்.
குவியும் கூட்டம்
ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் குவிந்து வருவதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் தவித்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகரிக்கவே பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருக்கின்றன.