அபுதாபியில் 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தமிழர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டார்!
அபுதாபியில் 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்தவர் தமிழகம் கொண்டுவரப்பட்டார்.
சென்னை: அபுதாபியில் 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்தவர் தமிழகம் கொண்டுவரப்பட்டார். விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திரவேல் வினைதீர்த்த உடையார். 37 வயதான இவர் அபுதாவில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சித்திரவேல் உடையார்தான் அக்குடும்பத்தின் பொருளாதார ஆதரமாக இருந்தார்.
2015ல் இருந்து கோமா
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அபுதாபியில் நிகழ்ந்த ஒரு சாலைவிபத்தில் சிக்கினார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் கோமா நிலையில் இருந்தார்.
நேற்று கொண்டு வருகை
இந்நிலையில் தூதரக உதவியுடன் சித்திரவேல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார். இதையடுத்து அவர் சேலம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இழப்பீடு வழங்க உத்தரவு
முன்னதாக அவருக்கு காப்பீடு வழங்கக்கோரி காப்பீட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்குமாறு அவர் பணிபுரிந்து நிறுவனத்துக்கு இந்திய தூதரகம் உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
சித்திரவேல் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவருக்கு இதுவரை விடுமுறை கொடுத்ததோடு மாதந்தோறும் தங்களுக்கு சம்பளம் வழங்கி வந்ததாகவும் சித்திரவேலின் மனைவி பரமேஸ்வரி கூறியுள்ளார். தங்களின் பொருளாதார ஆதாரமாக இருந்த சித்திரவேல் தற்போது கோமாவில் உள்ளதால் அவரது மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பரமேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை
சித்திரவேலின் சகோதரரும் அதே நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வந்துள்ளார். இதுவரை அபுதாபியில் அவர்தான் சித்திரவேலை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவருக்கு சிகிச்சையை தொடரப்போவதாக அவரது மனைவி பரமேஸ்வரி கூறியுள்ளார். தனது கணவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.