இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லை.. விஷம் அருந்தி தந்தை பலி.. தாய்-மகள் கவலைக்கிடம்
வறுமை காரணமாக தாய்-தந்தை-மகள் என 3 பேரும் விஷம் குடித்தனர்.
மண்ணச்சநல்லூர்: இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லாத கவலையில் தந்தை-தாய்-மகள் என குடும்பமே விஷம் அருந்தியது. இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாயும்-மகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
பொறியில் படிக்க பணம் இல்லாத விரக்தியில் பெற்றோருடன் மாணவி விஷம் குடித்தார். இதில் தந்தை பலியானார். தாயும், மகளுடன் தீவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். வயது 55. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரே மகள் காயத்ரி. இந்த ஆண்டுதான் பிளஸ் 2 முடித்தார். பிரபாகரன் தன் மகளை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் குறைவான சம்பளம் காரணமாக குடும்பமே வறுமையில் தவித்து கிடந்ததால், மகளை படிக்க முடியவில்லை.
இதுகுறித்து அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததுடன், மன அழுத்தத்திலும் இருந்துள்ளார். இதுபோலவே கலைவாணியும், காயத்ரியும் விரக்தியில் இருந்து வந்துள்ளனர். அதனால் 3 பேருமே தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி நேற்று பிற்பகல் 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.
நீண்ட நேரம் யாரும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததாலும், இரவு நேரமாகியும் வீட்டில் விளக்கு எரியாததாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, 3 பேருமே மயங்கி விழுந்திருந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார். கலைவாணியும், காயத்ரியும் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.