என்னை விட்டு போய்விட்டாயே லட்சுமி.. மனைவி இறந்தசோகம்.. சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை
மனைவி உயிரிழந்ததால் கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல், அவரது சேலையிலேயே கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் வயது 32. இவரது மனைவி லட்சுமி, 29. மிகவும் அன்னியோன்யமான வாழ்ந்து வந்தார்கள். லட்சுமணன்-லட்சுமி... இந்த ஆதர்ச தம்பதிகள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் லட்சுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இறந்த அன்று லட்சுமியின் சடலதை கண்டு லட்சுமணன் கதறி துடித்து அழுதார். அவரை அன்றைய தினம் தேற்றி ஈமச்சடங்கை செய்ய வைக்கவே உறவினர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
லட்சுமி இறந்து நாட்கள் செல்ல செல்ல லட்சுமணன் மன நிலைமையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவரால் அந்த லட்சுமியின் இறப்பிலிருந்தும், இழப்பிலிருந்தும் மீளவே முடியவில்லை. எப்போதும் அழுதுகொண்டே இருந்தார். நாள்தோறும் மனைவியின் நினைப்பே லட்சுமணனை வாட்டி எடுத்தது. யாரிடமும் சரியாக கூட பேசுவது இல்லையாம். மனைவி மறைந்து 3 மாதங்களாகியும் விரக்தியின் உச்சத்திலே கிடந்த லட்சுமணன் நேற்று வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் யாருமே இல்லை என கூறப்படுகிறது. இப்படியே மனைவி நினைப்பில் இருந்து வாழ்வதை விட உயிரை விடுவதே மேல் என நினைத்துவிட்டார். அதனால், லட்சுமியின் பெட்டியை திறந்து அதிலிருந்து ஒரு புடவையை எடுத்தார். வீட்டின் உத்திரத்தில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த உறவினர்கள் லட்சுமணன் தற்கொலையை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் விரைந்து வந்த அவர்கள் லட்சுமணனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மனைவி மீது லட்சுமணன் அளவுகடந்த பாசம் வைத்திருந்ததுடன், மனைவியின் சேலையிலேயே தூக்கில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.