அந்தம்மாவுக்கு நீளமா கூந்தல் இருக்கே.. குறி வைத்து "கட்" செய்த "திருப்பாச்சி திருடன்" கைது!
பெண்களின் நீளமான கூந்தலை வெட்டிச்சென்று விற்பனை செய்த திருடனை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.சவுரிமுடி பற்றாக்குறை ஏற்பட்டதால் பெண்களின் நீளமான கூந்தலை குறி வைத்து வெட்டியது அம்பலமாகியுள்ளது.
சென்னை: சென்னையில் அண்மைக்காலமாக நீளமான கூந்தலை உடைய பெண்களின் முடி பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் வெட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து முடியை வெட்டி விற்பனை செய்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நகை, பணம், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை மட்டுமே இதுவரை கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பெண்களின் நீளமான கூந்தலையும் அவர்கள் குறிவைத்து திருட தொடங்கியுள்ளனர்.
சென்னை பேருந்துநிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் நீளமான கூந்தலுடைய பெண்களின் முடி திடீரென காணாமல் போவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ரயில்வே நிலையத்தில் மாயமான கூந்தல்
கடந்த 29ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சித்ரா என்ற பெண் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சித்ராவின் முடியை வெட்டி எடுத்துக்கொண்டு ஓடினார்.
அழுது புலம்பிய பெண்
நீளமான முடி பறிபோனதால் அந்த இளம் பெண் அழுது புலம்பினார். இதனைக் கண்ட ரயில்வே போலீஸ் முடியை வெட்டிச் சென்ற மர்ம நபரை விரட்டிப்பிடித்தனர்.
காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட திருடன்
இதையடுத்து அந்த நபர் எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் ஒரு தலைக் காதலா, முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அதிர்ந்து போன போலீசார்
விசாரணையில் அந்த நபர் கூறிய காரணத்தைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். புகார் அளித்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்.
விசாரணையில் வந்த தகவல்
போலீசார் நடத்திய விசாரணையில் முடியை வெட்டிய நபர் கடலூரைச் சேர்ந்த அம்புரோஸ் என்பதும் சவுரிமுடி, டோப்பா ஆகியவற்றை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
முடியை வெட்டிய காரணம்
பெண்கள் தங்களின் முடிகளை அழகு நிலையத்திற்கு சென்று நறுக்கி விடுவதோல் அம்புரோசுக்கு நீளமான கூந்தல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டதால் நீளமான கூந்தல் கொண்ட பெண்களை கண்காணித்து அவர்களின் முடிகளை வெட்டி வந்துள்ளார்.
10 பெண்களின் முடி திருட்டு
இதுவரை 10க்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் முடியை அம்புரோஸ் திருடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடி விற்பனை
பராமரிக்கப்பட்ட முடி என்பதால் சவுரியை உடனடியாக தயாரித்து அப்போதே விற்க முடியும் என்பதால் இந்த திருட்டில் ஈடுபட்டதாக அம்புரோஸ் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து அம்புரோஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பெண்களின் நீளமான முடி வியாபாரத்துக்காக வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சி ஸ்டைலில்
திருப்பாச்சி படத்தில் இப்படித்தான் விஜய்யின் தங்கையின் தோழிக்கு நீண்டகூந்தல் இருக்கும். அதைப் பார்த்து ஏங்கும் தங்கைக்காக நைட்டோடு நைட்டாக போய் கூந்தலை கட் செய்வார் விஜய். அந்த பாணியில் நீளக் கூந்தலைக் குறி வைத்துத் திருடியுள்ளார் இந்த திருடன் என்பது குறிப்பிடத்தக்கது.