அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்!
அவித்த முட்டையை விழுங்க முற்பட்டவர் உயிரிழந்தார்.
புதுவை: அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேகரன் எடுத்து முழுவதுமாக விழுங்க முற்பட்டார். ஆனால் முட்டை அவரது தொண்டைக்குள் சிக்கி விக்கல் எடுக்க ஆரம்பித்தது. இதனால் புனிதா விரைந்து வந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் குணசேகரனால் முட்டையை விழுங்கமுடியவில்லை.
இதனால் முட்டை தொண்டையிலேயே சிக்கியிருந்ததால், சிறிதுநேரத்தில் குணசேகரன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன புனிதா அவரை உடனடியாக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குணசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.