உன்னை கொல்லாமல் விட மாட்டேன்.. தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து வெட்டி பழி தீர்த்த மகன்
தாயை கொன்றவரை பழி வாங்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்: ராஜபாளையத்தில் தனது தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து மகன் கொலை செய்துள்ளார்.
பொன்னாகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம். 2014-ம் ஆண்டு பணத் தகராறு காரணமாக ரமணி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து 2015-ம் ஆண்டு வெளியே வந்தார் சுப்பிரமணியம்.
அரிவாளல் தாக்குதல்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது தாயார் இந்திராணியுடன் மலையடிப்பட்டி வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக், மற்றும் கார்களில் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் இவர்களது ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் ஆட்டோவிலிருந்த சங்கரசுப்பிரமணியத்தை வெளியே இழுத்து போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தது.
தாய் கண் முன்னால் வெட்டு
இதில் துடிதுடித்த சங்கரசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பிணமானார். தன் கண் முன்னாலேயே பெற்ற மகனை கொலை செய்யப்பட்டதால் அலறி துடித்தார் இந்திராணி. உடனடியாக ராஜபாளையம் வடக்கு போலீசாரிடம் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டனர்.
கொல்லாமல் விடமாட்டேன்
அதில் 2014-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் என்பவர்தான் இந்த கொலையை செய்து வந்தார் என்பதும், அதற்காக சங்கர சுப்பிரமணியத்தை அடிக்கடி சந்தித்து "உன்னை கொல்லாமல் விட மாட்டேன்" என மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
6 பேர் கைது
மேலும் ரங்கராஜனை பழிக்கு பழியாக கொலை செய்ய கடந்த 3 வருடங்களாக பலவாறாக யோசித்ததும், இதற்காக தனது நண்பர்களை துணைக்கு அழைத்ததும் விசரணையில் வெளிவந்தது. இதனையடுத்து ரெங்கராஜன் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.